அன்புநிறை தோழமைகளுக்கு இனிய வணக்கம்.
உலகத்துக்கே நாகரீகத்தை சொல்லிக்கொடுத்த
தமிழ் வரலாற்றில் நாட்டுப்புறக் கலைகளுக்கு சிறந்த
இடம் உண்டு. அப்படி பெருமை வாய்ந்த கலையின்
முன்னோடியாம் தெருக்கூத்து கலை பற்றி இங்கே கவிதையாக
தருவதற்கு முயற்சிக்கிறேன். சேகரித்த செய்திகளை
நல்வண்ணம் கொடுத்திட எத்தனிக்கிறேன். பிழைகள் ஏதும்
இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள் என்னைத்
திருத்திக்கொள்கிறேன். அழகான கலை இது சரியான முறையில்
பிழை இல்லாமல் பின்வரும் சந்ததிகளுக்கு சென்று சேரவேண்டும்.
விளக்கமாக சொல்லவேண்டும் என்ற எண்ணம் தோன்றவே
ஒரே பதிவில் சொன்னால் மிகவும் நீளமாக ஆகிவிடும் என்ற
காரணத்தால் தொடர் கவிதையாகத் தருகிறேன், அதையும் என் குரலில்
பாடி ஒலிப்பேழையாக தருகிறேன்.
நெஞ்சம் நிறைந்த நன்றிகளுடன் ... இதோ பாடல்.....
ஆத்தங்கரை மேலிருக்கும்
அழகுப் பிள்ளையாரே! ஆனை முகத்தோனே
அரிதாரம் பூசிவந்தேன்
ஆனை முகத்தோனே!!
தரணியெங்கும் புகழ்கொண்ட
தங்கத் தமிழ்த்தாயே! எங்க தங்கத் தமிழ்த்தாயே
முன்னிருந்து காக்கவேணும்
மூத்தகுடித் தாயே!!
எங்களுக்கு இந்த கலைய
கத்துதந்த சாமி! ஐயா கத்துதந்த சாமி
குருபாதம் தொழுகின்றோம்
ஆசி வேணுமய்யா!!
தன்னனன்னே தானேனன்னே
தானேனன்னே தானே தன தானேனன்ன நானே
தன்னான தானேனன்னே
தானேனன்னே தானே!!
வந்திருக்கும் பெரியோரே
ஆசி வேணுமய்யா! உங்க ஆசி வேணுமய்யா!
உயிராக சுமக்கும் கலைய
காக்க வேணுமய்யா!!
முக்கனிபோல் சுவையான
தெருக்கூத்து கட்ட! அந்த நல்லகூத்து கட்ட!
முத்தமிழை கூட்டிவந்தோம்
நாடோடி நாங்க!!
தெவிட்டாத தேன்தமிழில்
பாடிவந்தோமய்யா! அழகா பாடிவந்தோமய்யா!
தெருக்கூத்து எனும் கலைய
ஆடிவந்தோம் ஐயா!!
நாடகத்தின் முன்னோடி
எங்க கலை ஐயா! இந்த தங்க கலை ஐயா!
கலையின் வடிவமைப்பை
சொல்ல வந்தேனய்யா!!
பதினாறு கலைஞரோட
வாத்தியாரும் இருக்கார்! நம்ம வாத்தியாரும் இருக்கார்
அழகான இந்த குழுவுக்கு
சமா என்று பேரு!!
பேர்பெற்ற எங்க கலை
தெருக்கூத்து தானே! இந்த நல்ல கூத்துதானே!
அழகான மறுபெயராம்
கட்டைக் கூத்து தானே!!
வடக்கு தெற்கு என
வண்ணம் கொண்டோமய்யா! நல்ல வண்ணம் கொண்டோமய்யா!
அண்ணாமலை தீரம்விட்டு
ஆடி வந்தோமய்யா!!
........ தொடர்ந்து கூத்து கட்டுவோம்......
அன்பன்
மகேந்திரன்